31/07/2021
தாராபுரத்தில் முதல்வர் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்.
காப்பீடு திட்டத்தில், கொரோனா சிகிச்சை பெற வசதியாக, தற்காலிகமாக கூடுதல் பதிவு மையங்கள் அமைக்க, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டம், மத்திய அரசின் காப்பீடு திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.கொரோனா சிகிச்சையும், இதில் பெறலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, தனியார் மருத்துவமனைகளிலும், காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுவரை கண்டுகொள்ளாத மக்களும், காப்பீடு திட்டத்தில் இணைந்து, அடையாள அட்டை பெற ஆர்வம் காட்டி வருகின்றனர். மாவட்டம் தோறும், கலெக்டர் அலுவலகத்தில், காப்பீடு திட்ட பதிவு முகாம் நடந்து வருகிறது.திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருப்பதாக, சான்று பெற்று வந்து, காப்பீடு திட்டத்தில் இணைகின்றனர்.
பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், கலெக்டர் அலுவலகம் வந்து, காப்பீடு திட்டத்தில் பதிவு செய்வதால், கூட்டம் களைகட்டிவிடுகிறது.
கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதாலும், மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையிலும், கூடுதல் பதிவு மையம் அமைக்க, மக்கள் வலியுறுத்தி வந்தனர். கோரிக்கையை பரிசீலித்த கலெக்டர் வினீத், கொரோனா சிகிச்சை பெற வசதியாக, கூடுதலாக, தற்காலிக பதிவு மையங்களை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:கலெக்டர் அலுவலகத்தில் மட்டும், காப்பீடு திட்ட பதிவு முகாம் நடந்து வருகிறது. மக்களின் சிரமத்தை குறைக்க, திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகம் மற்றும் தாராபுரம் தாலுகா அலுவலக வளாகம் ஆகிய இரண்டு இடங்களில், தற்காலிக முகாம் அலுவலகம் திறக்கப்பட உள்ளது. குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு, கூடுதல் காப்பீடு மையங்கள் இயங்கும். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மையம் நிரந்தரமாக இயங்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.