22/06/2024
நானும் விவசாயமும்...
"தெரிஞ்ச தொழிலை தொடாதவனும் கெட்டான்,
தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்"
என்பது பழமொழி ...
அதுவும் நன்றாக செய்துக்கொண்டிருந்த நகைக்கடை தொழிலுடன் 2002 ஆம் 55 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயத்தில் புகுந்தேன்.
தண்ணீர் இல்லாமல் ஐந்து , ஆறு தென்னை மட்டைகள் காய்ந்து தொங்கிக்கொண்டு இருந்தது (நல்ல மரத்தில் 25 to 30 இருக்கும்).
நமக்கு புதிய தொழில் தானே விவசாயம் .
ஆர்வக்கோளாரில்
12000 வாழை ( பூவன் , ரஸ்தாளி , கற்பூரவள்ளி , பச்சை வாழை ) போன்றவை வைத்தேன் . நஷ்டம் தான் கிடைத்தது
நன்றாக வந்தபோது விலை இல்லை.
நன்றாக வந்தபோது காற்று அடித்து சாய்ந்துவிட்டது .
கரும்பு போட்டேன்
அதிலும் நஷ்டத்தை சந்தித்தேன் .
கட்டிங் ஆர்டர் தாமதம்
கட்டிங் ஆட்கள் வருவதில் தாமதம்
ஏற்றுவதற்கு வண்டிக்கு லஞ்சம்.
நெல் போட்டேன்
போட்ட அசல்கூட தேறவில்லை. ஒரு மடங்கு கூடுதல் செலவு .
கடலையும் , எள்ளும் , உளுந்தும் போட்டேன்... அதேபோல் தான். ஒரு மடங்கு கூடுதல் செலவு...
சரி சரி... இவை மட்டுமா ?
ஒரு கன்று குட்டி 1500 க்கு வாங்கி வளர்த்தேன். ஒரு வருடத்தில் 9000 விலைக்கு கேட்டார்கள். கொடுக்கவில்லை .
மனது லாபத்தை நோக்கி போய்விட்டது .
கொஞ்சம் கொஞ்சமாய் 108 மாடுகள் , 67 நாட்டு ஆடுகள்( கொடி ஆடுகள் உள்பட )வாங்கி வளர்த்தேன் ஆசையுடன் . இதற்கு தனி மருத்துவரும் கூட.
இதிலும் நஷ்டம் என்னை தொற்றிக்கொண்டது. ஆம் மாடுகளுக்கு நோய் . ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு . பணம் போனாலும் போகட்டும் உயிரே முக்கியம் என்று மாடுகளுடன் சேர்ந்து நான் துடித்ததை என்றுமே மறக்க முடியாது. போதும் என்று அனைத்தையும் மிக குறைந்த விலைக்கு விற்றுவிட்டேன்.
பண்ணையை விட்டு பிரிய மனம் இல்லாமல் ஒரு மாட்டின் ( வண்டியில் ஏற்றும்போது ) மா என்ற சத்தம் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது ... இறைவா ...
நஷ்டம் என்னை விட்டு விலகவில்லை.
வெண்ணிலா பீன்ஸ் செடியின் தகவல் கிடைத்தது. அதைப்போட்டு அழிப்பதற்கே நல்ல செலவு தான் மிச்சம்.
அடி மேல் அடி ...
அப்போது தான் உணர்ந்தேன் . ஆரம்பத்தில் இருந்தே ஆங்காங்கே தேக்கு , ரோஸ் உட் , பாக்கு, தென்னை மரங்கள் வைத்திருந்தேன். அது மன நிறைவாய் இருந்தது.
பல பல கஷ்டங்களுக்கு பிறகு சுதாரித்துக்கொண்டு சந்தனம், செஞ்சந்தனம், மகாகனி , குமிழ் , பலா மற்றும் மேலும் பல மரங்களை நட்டு சொட்டு நீர் பாசனம் போட்டு விட்டேன் .
இப்போது மரங்களின் பசுமை மன நிறைவாகவும், நிகழ்கால எதிர்கால சிறந்த வருமான வழிகலாகவும் இருக்கிறது.
பல பல பல போராட்டங்களை கடந்தது
வெற்றி கனியை பறித்தபோது தான் மனம் தன் உச்சக்கட்ட நிலையை அடைகிறது.
எத்தனை முறை தோல்விகள் என்றாலும் இறுதியில் வெற்றி கிடைக்கத்தான் செய்கிறது... #சிஷ்யன்