04/04/2022
அறிவியல் முறைப்படி நீர் ஊற்று எப்படி பார்க்க வேண்டும்.
ரெஸிஸ்டிவிடி மீட்டர்’
நிலத்தடி நீர் ஆய்விற்கு ‘ரெஸிஸ்டிவிடி மீட்டர்’ என்ற கருவியும் உபயோகப்படுத்தப்படுகிறது. பூமியில் ஒரு நேர்கோட்டில் நான்கு கடப்பாறைகள் குறிப்பிட்ட இடைவெளியில் அடிக்கப்பட்டு, ஒயர்கள் மூலம் ‘ரெஸிஸ்டிவிடி’ மீட்டருடன் இணைக்கப்படுகின்றன. சி–1, சி–2 எனக் குறிப்பிட்டுள்ள இரண்டு ’எலக்ட்ரோடுகள்’ மூலம் குறிப்பிட்ட அளவு மின்சாரம் பூமிக்குள் செலுத்தப்படுகிறது. அவ்வாறு செலுத்தப்படும் மின்சாரம் மின் அலைகளாக பாறைகளின் வழியாக, பாறையின் தன்மை, அதன் அமைப்பு, பாறைகளிலுள்ள பிளவுகள் இவற்றின் தன்மைக்கேற்ப பாய்ந்து மின் எதிர்ப்பு ஏற்படுத்துகிறது.
இவ்வாறு ஏற்படும் மாறுதல் பாறைக்குள் அடிக்கப்பட்டுள்ள பி–1, பி–2 என்ற எலக்ரோடுகள் மூலம் ரெஸிஸ்டிவிடி மீட்டரில் அளவிடப்படுகிறது. அந்த எலட்ரோடுகளுக்கு இடைப்பட்ட தூரம் எவ்வளவோ அந்த அளவு ஆழத்தில் உள்ள படிவங்கள், பாறைகளின் மின் எதிர்ப்பு சக்தி ஆகியவை கணக்கிடப்படுகிறது. இந்த இடைவெளி தூரம் 2 மீட்டர் முதல் 50 மீட்டர் வரை வேறுபடும்.
இந்த நவீன முறையைப் பயன்படுத்துவதன் மூலம், நிலத்திற்கு அடியில் உள்ள படிவப் பாறை, கடினப் பாறை, மணல் பகுதி ஆகியவற்றை அறிய முடியும். மேலும் நிலத்திற்கடியில் எத்தனை அடி ஆழத்தில் நீர் கிடைக்கும் என்பதையும் நீரின் தன்மையையும் ஓரளவு கணிக்க இயலும். இதன் மூலம்,
* நிலத்தடி நீர் உள்ள ஆழம், அடர்த்தி, அளவு மற்றும் வெளியேற்றும் திறன் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.
* நிலத்தடி நீர் செறிந்துள்ள இடத்தை முப்பரிமாண படமாக பார்க்க இயலும்.
* அதிக பட்சம் 1500 அடி ஆழம் வரை உள்ள நீரின் தன்மை பற்றி அறிந்து கொள்ளலாம்.