18/05/2026
பண்ணைக்காடு பெருங்கற்கால சின்னங்கள் :
கொடைக்கானல்-தாண்டிக்குடி செல்லும் வழியில் உள்ளது பண்ணைக்காடு கிராமம். இப்பகுதியில் பொதுவழிச்சாலையிலிருந்து சற்று விலகிச் சென்றால் தொல்லியல்துறையால் பாதுகாக்கப்பட்டு (?) வரும் அரிதான பெருங்கற்படை மக்களின் நினைவுச்சின்னங்கள் உள்ளது. தொல்லியல் சின்னத்தின் சில சிறப்புகளை காண்போம்.
கற்திட்டைகள்
இவ்விடத்தில் மிகப் பிரம்மாண்டமான கற்திட்டைகள் காணப்படுகிறது. இதன் சிறப்பம்சம் யாதெனில், இக்கட்டிடத்தை சற்று ஆழ்ந்து யோசித்தால், ஒரு நெறிமுறையை உருவாக்கி, வழிபடும் தன்மையுள்ளபடி ஓர் நினைவுச்சின்னத்தை ஏற்படுத்தியதே,
தஞ்சை கோவிலை கட்டிய பொறியாளர் குஞ்சர மல்லன், எவ்வாறு ஒரு கற்பனையை தன் மனதில் உருவாக்கி, அதனை செயல்படுத்தினாரோ, அதற்கு சற்றும் குறைவில்லாதது இந்த பெருங்கற்படை சின்னம் எழுப்பிய நமது பெருந்தச்சரின் செயல்திறனும், ஒரு பார்வையாளனாக அவரது செயல்திறனை ஆராய்தல் அவசியம்.
முதலில் இம்மலை மீது அமைந்துள்ள நினைவுச்சின்னங்களை அமைக்க
சற்று சரிவான அந்த மலைப்பகுதியை சமன் செய்து, அதன்மீது உறுதியான கற்களைக் கொட்டி அதன் தளத்தினை முதலில் உயர்த்தியுள்ளனர். (மாடக்கோவில்கள் கட்டுவதைப் போன்று) அதன் மேலே உயரமாக கற்திட்டைகளை வைத்துள்ளனர். தொலைவிலிருந்து வருபவர்கள் பார்த்து அறிந்து கொள்ளவும், உள்ளே இருப்பவன் என் தலைவன் என பிற குடியினர் அறிந்துகொள்ளவும் அமைத்துள்ளனர் போலும், இக்கல்திட்டைகள் அமைந்துள்ள கருவறை போன்ற பகுதி வட்டவடிவில் அமைந்துள்ளது. இதனை போன்று அமைந்துள்ள கோவில்களை கட்டிடக்கலை ஆகமநூல்கள் சுத்த வேசரம் என்கிறது. கருவறை வெளியே பிரம்மாண்டமாக வட்டவடிவில் ஓர் திருச்சுற்று அமைத்துள்ளனர். இத்திருச்சுற்றிற்கும், இந்த கருவறைக்கும் உள்ள இடைவெளியில், சுற்றி வலம் வருவது போன்ற ஓர் அமைப்பும் உருவாக்கியுள்ளனர். மலையின் சமதளத்திலிருந்து வாயிலின் முன்புறம் ஏறிச்சென்று உள்ளே உள்ள தலைவனை வணங்குவதற்கு ஏதுவாக படிக்கட்டு போன்ற அமைப்பும் அமைத்துள்ளனர்.
இதுவல்லவோ கோவிலின் முன்னோடி என கூறமுடியும். இதனை உருவாக்கியவனே அன்றைய பொறியாளனாக இருக்க முடியும். இதன் உள்ளே உறைபவனே வள்ளுவர் கூறும்
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
எனும் தெய்வமாக இருக்க முடியும்.
திருச்சி பார்த்தி