01/09/2012
இந்தியாவால் வெளியேற்றப்பட்ட தமிழ் விஞ்ஞானிக்கு வடமெரிக்க தமிழ்சங்கம் கவுரவம்!
நியூயார்க்: இந்தியாவால் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தமிழ் விஞ்ஞானி சிவா அய்யாதுரையை வட அமெரிக்கத் தமிழர் பேரவையான பெட்னா சிறப்பித்து கவுரப்படுத்தியிருக்கிறது.
இப்போதெல்லாம் 'மெயில்' வந்துருக்கு ன்னு வீட்டிலே யாரும் சொன்னால் அது தபாலில் வந்த மெயில் என்ற எண்ணம் வருவதில்லை. 'மெயில்' என்றால் ‘இமெயில்' தான் என்று ஆகிவிட்டது. ஃபேஸ்புக், டுவிட்டர் என வெவ்வேறு பரிமாணங்களில் தகவல் தொழில் நுட்பம் முன்னேற்றம் கண்டாலும், இமெயில் எனபது அன்றாட செயல்களில் முக்கிய அம்சமாகிவிட்டது. தற்போதைய வாழ்க்கை முறையையே மாற்றிப் போட்டுவிட்டது.
முதன் முதலாக இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo ("To:", "From:", "Subject:", "Bcc:", "Cc:", "Date:", "Body:"), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.) அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை கண்டு பிடித்தவர் அமெரிக்க நியூ ஜெர்ஸி மாகாணத்தில் வசித்து வந்த 14 வயதே நிரம்பிய வி.ஏ. சிவா அய்யாதுரை என்ற தமிழ்க் குடும்பத்தை சார்ந்த மாணவன்.
ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ, அவருக்கு அந்த அங்கீகாரத்தை கொடுக்காமல், இமெயில் உரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர்.
நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறையாக வி.ஏ. சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இமெயில்' ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி, டாக்டர். வி.ஏ. சிவா அய்யாதுரை 'இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ்' என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
நியூ ஜெர்ஸி மாகாணம் நேவார்க் நகரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் சார்பில், நேவார்க் நகர உயர் நிலைப்பள்ளி மாணவர்களை புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாதுரை.
மாணவனாக இருந்த போது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பல்வேறு சோதனைகளுக்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்த சோகம் நேரக்கூடாது என்பதற்காகவும், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில்களை தொடங்கும் வகையிலும் இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணையாக இருக்கும் என்றார்.
பல தொழில்களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய்யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலைக் கழகமான எம்.ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். சமீபத்தில் நடந்த வட அமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா) வெள்ளிவிழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ‘இமெயில்' பயணத்தை http://www.inventorofemail.com/ தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் அவமதிப்பு
இதே சிவா அய்யாதுரையை மத்திய அரசின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2008-ம் ஆண்டு டெல்லிக்கு அழைத்தது. அவரும் இந்திய அரசின் அழைப்பை ஏற்று டெல்லியில் வந்து பணியாற்றினார். ஆனால் மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத் தலைவரை விமர்சித்தார் என்று கூறி அவரை இதர விஞ்ஞானிகள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அவருக்கான இணைய தொடர்பும் துண்டிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் அவர் தங்கியிருந்த அரசு வீட்டிலிருந்தே வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.
இப்படி இந்தியா அவமதித்த அய்யாதுரைதான் பெட்னா மாநாட்டில் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்.
-யுஎஸ்ஸிலிருந்து உதயன்
V.A. Shiva Ayyadurai is the inventor of email. He invented the first email system and was awarded U.S. Copyright for EMAIL.