25/11/2020
வலுப்பெறும் `நிவர்' புயல்... மின்னணு, மின்சார சாதனங்களை கையாள்வது எப்படி?
"'நிவர்' புயல் நாளை மாலை அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரையைக் கடக்கும்போது பலத்த காற்று வீசும். மணிக்கு 120-130 கி.மீ வேகத்திலும், சமயங்களில் 145 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்” எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நிவர் புயல் தற்போது மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது பலத்த காற்று வீசும் எனவும் அதி தீவிர புயலாக வலுவடைந்து நாளை மாலை கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#பெரும் மழையும் வேகமான காற்றும் வீசும் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதால் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். இது போன்ற நேரத்தில் மின்னணு மற்றும் மின்சார சாதனங்களை பாதுகாப்பாகவும், பயனுள்ளதாகவும் எப்படி பயன்படுத்தலாம்?
#இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்போது டிவி போன்ற முக்கியமான சாதனங்களை மின்சார இணைப்பிலிருந்து துண்டித்துவிடுங்கள். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், யாரும் பெரிதாகப் பொருட்படுத்துவது கிடையாது. ஆஃப் செய்து வைத்தால் மட்டும் போதுமானது என இருந்துகொள்கிறார்கள். அருகிலுள்ள மின் கம்பங்களில் இடி விழுந்தால் திடீரென வரும் அதிக மின் அழுத்தத்தால் இந்த சாதனங்கள் கருகிப்போகும். இது நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
#கனமழை என்றால் முதலில் துண்டிக்கப்படுவது மின்சாரமாகத்தான் இருக்கும். அதனால் மின்சாரம் இருக்கும் போதே போன்களை முழுவதுமாக சார்ஜ் ஏற்றிவிடுங்கள். பவர்பேங்க் இருக்குமானால் அதையும் சார்ஜ் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
#இந்த மாதிரியான நேரங்களில் ஒரு போன் உயிர்காக்கும் சாதனமாக கூட மாறும். அதனால் அவற்றை தேவையில்லாத விஷயங்களுக்கு பயன்படுத்தாமல் முடிந்த வரை சார்ஜை பாதுகாத்து வையுங்கள். தேவையற்ற நேரங்களில் டேட்டாவை ஆஃப் செய்துவையுங்கள்.
#சில வீடுகளில் பேட்டரி போட்டுப் பயன்படுத்தும் ரேடியோக்கள் இருக்கும். அவசர நேரங்களில் போனுக்குப் பதிலாக அதில் வானிலை நிலவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
#வீட்டில் ஒன்றுக்கும் அதிகமான போன் இருந்தால் ஒரே நேரத்தில் அனைத்தையும் பயன்படுத்தாமல் ஒவ்வொன்றாகப் பயன்படுத்துங்கள்.
#வீட்டின் Wifi-யை மட்டும் நம்பியிருப்பவர்கள் உடனடியாக மொபைல் டேட்டா பேக் ஒன்றை சில நாட்களுக்கு மட்டும் போட்டுக்கொள்ளுங்கள்.
#டார்ச்லைட் போன்ற சாதனங்களுக்கு பேட்டரி இருக்கிறதா என இப்போதே சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
#தண்ணீருக்கும் மின்சார மற்றும் மின்னணு சாதனங்களுக்கு என்றுமே ஒத்துவராது. அதனால், ஈர கைகளுடன் ஸ்விட்ச் போர்டு போன்ற மின்சாரம் பாயும் இடங்களில் கை வைக்க வேண்டாம்.
#மின்சாரத்தைக் கடத்தாத மரக்கட்டை அல்லது வேறு எதாவது பிளாஸ்டிக் பொருள் ஒன்றைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். ஸ்விட்ச் போடுவதிலிருந்து பல விஷயங்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
#பழைய வீடு என்றால் சுவருக்குள் நீர் புக வாய்ப்பிருக்கிறது. அந்த மாதிரியான சூழல் நேர்ந்தால் நேரடியாகச் சுவர்களைத் தொடாமல் இருங்கள்.
#வீட்டில் தண்ணீர் புக வாய்ப்பிருப்பதாகத் தெரிந்தால் லேப்டாப் போன்ற சாதனங்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டு முடிந்தவரைத் தண்ணீர் புகாத வண்ணம் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
#முன்பு சொன்னது போல இது போன்ற நேரங்களில் மொபைல் போன்கள் மிகவும் முக்கியமான சாதனங்கள். அவற்றைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். தண்ணீர் போகாத வண்ணம் அதைப் பாதுகாக்க பிளாஸ்டிக் பை அல்லது வேறு எதாவது பொருளைத் தயாராக வைத்திருங்கள். மழை நேரத்தில் அதை எப்போதும் கைகளில் வைத்துக் கொள்ளுங்கள்.
#சிலர் 'என் போன் வாட்டர் ரெசிஸ்டென்ட் தானே' என இருப்பார்கள். இதுபோன்ற நேரங்களில் பாதிப்புகள் எந்த அளவு இருக்கும் எனத் தெரியாது அதனால் முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வது நல்லது.
Thanks Vikatan.com