05/12/2019
இனி அனுமதிப்பத்திரமில்லாமல் மணல் கொண்டு செல்லலாம்: மணல் கொள்ளையர்களிற்கு மகிழ்ச்சியான செய்தி!
வியாழன், 5 டிசம்பர், 2019
மணல்,மற்றும் களிமண் கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திர முறையை தற்காலிகமாக தளர்த்தியுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்தல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவை எடுத்ததாக, இன்று (5) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
எனினும், இதை அமைச்சர் அறிவித்தபோது செய்தியாளர்கள் அவரை கேள்விகளால் குடைந்தெடுத்தனர். கல்குவாரி, மணல் அள்ளும் அனுமதிப்பத்திரம் வழங்களில் உள்ள குழறுபடிகளை சீர் செய்ய, சட்டவிரோத மணல் கடத்தலை இல்லாமலாக்க இந்த நடவடிக்கையெடுத்ததாக தெரிவித்தார்.
எனினும், மணல் அள்ளுமிடத்தில் யாரும் சிக்குவதில்லை, மணலை கொண்டு செல்லும் வழியிலேயே சிக்குகிறார்கள், இந்த தடைநீக்கம் அவர்களிற்கு வாய்ப்பாக அமையாதா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், ஒரு வாரம் மட்டும் பொறுத்துக் கொள்ளும்படியும், அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த விடயத்தை ஒழுங்குபடுத்தும் விதமான இறுதி ஏற்பாடுகள் அறிவிக்கப்படும் என்றார்.
அனுமதிப்பத்திரம் இல்லாமல் மணல் ஏற்றிச்செல்பவர்கள் கைது செய்யப்பட மாட்டார்களா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, இந்த வாரம் கைது செய்யப்பட மாட்டார்கள் என பதிலளித்தார்.
கைது செய்யப்பட்டால் யாரிடம் முறையிடுவது என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, பாதுகாப்பு செயலாளரிடம் முறையிடலாமென தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்கத்தின் இந்த முடிவு மணல் கொள்ளையர்களிற்கு சட்டபூர்வ அங்கீகாரமளிப்பதாக அமைந்துள்ளதாகவும், பொறுப்பான சுற்றுச்சூழல் அமைச்சரை நியமிக்க வேண்டுமென்றும் சுற்றுச்சூழல் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன