05/07/2021
தோல்வியின் அடிச்சுவடுகள்....
அது 1996 ல் ஒரு நாள். ஜப்பானின் NHK தொலைக்காட்சி நிறுவனம் இலங்கையின் எங்கோ ஒரு மூலையில் வாழும் விலாசம் தொலைந்த ஒரு குடும்பத்தினரை தேடி வருகின்றனர். இறந்து போன ஒரு நபரிற்கு மரியாதை செய்வதற்காகவே குடும்பத்தினரை தேடி வந்திருந்தார்கள்.அவர்கள் ஜப்பானிய பாடசாலைகளில் கற்பிக்கப்படும் 5 ம் தர பாட நூலொன்றையும் கொடுத்து விட்டு செல்கின்றனர்.
அந்த பாடநூலில் 12 பக்கங்கள் அவர்களது தந்தை பற்றிய குறிப்புகள் நிரம்பியிருந்தன. "ஒரு தோல்வியின் கதை "அங்கே மாணவருக்கு படிப்பினையாக போதிக்கப் படுகின்றது.ஆம் அது "The Great Loser "பற்றிய பாடம்.
இலங்கையில் 96 இன் பின்னர் தான் கருணானந்த ரனதுங்க பற்றி சில தகவல்கள் வெளிச்சத்திற்கு வரத்தொடங்கின.ஆனால் அதற்கு முன் கடந்து போன 32 வருடங்கள் கருணானந்த ஜப்பானிய மாணவர்களுக்கு ஹீரோ.
அது 1964 ம் வருடம். கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள்.10000 m ஒட்டப் போட்டிக்காக இலங்கையில் இருந்து தெரிவாகி போய் தோற்றதனால் வரலாற்றில் இடம் பிடித்த அந்த வீரனின் கதை தான் இது.
அந்த வருடம் குறித்த போட்டியில் முதலாம் இடம் பிடித்தவரை வரலாறு மறந்து விட்டது.20 வது சுற்றில் தனியாக ஓடியவரைப் பார்த்து பார்வையாளர்கள் சிரித்தார்கள், செருப்புகளையும், போத்தல்களையும் எறிந்தார்கள். 24 வது சுற்றில் ஒரு சிறுவன் மட்டும் கைத்தட்டி ஊக்கப்படுத்தினான். பின் உலகம் எழுந்து நின்று கை தட்டியது..
"உங்கள் நாட்டவர் எல்லாம் தலைகீழாகவா ஓடுவார்கள்?" என சக வீரர்கள் கேலி பேசினார்கள். "வெற்றி பெறுவதும் தோற்பதும் இரண்டாம் பட்சம்.நான் ஊரில் இருந்து வந்தது ஓடுவதற்காக. மற்றவன் ஓடி முடித்து விட்டான் என்பதனால் என் இலக்கு பூரணமாகவில்லை. என் சிறிய மகள் என்றோ ஒரு நாள் என் தந்தை ஒரு தலை சிறந்த வீரன் என்று நிச்சயம் கூறுவாள் "என்று பதில் சொன்னவர் கருணானந்த. மகள் சொன்னாரோ தெரியவில்லை. ஆனால் ஜப்பானிய மாணவர்கள் சொன்னார்கள், முன்மாதிரி கதாநாயகன் என வழிநடந்தார்கள்.
Olimpic போட்டிகள் முடிந்த பின் அனைவரும் தத்தமது நாடுகளிற்கு திரும்பினர். கருணானந்த ஜப்பானின் மூலை முடுக்கெல்லாம் இருந்த பாடசாலைகளிற்கு சிறப்பு விருந்தினர் ஆனார், வாழ்வு பற்றி போதிக்கும் ஞானியாக கொண்டாடப்பட்டார்.இரண்டாம் உலகப்போரில் உருக்குலைந்த ஜப்பானிற்கு கருணானந்த ஏதோ செய்தி சொன்னார். துணிவுடன் எழுந்து நிற்க வழி காட்டினார்.
அன்று கருணானந்த olimpic கிராமத்தில் தங்கியிருந்த அறை origami எனப்படும் ஜப்பானிய கைப்பணிப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு ஒரு நூதனசாலையாக பராமரிக்கப்படுகிறது.
போட்டியின் பின் ஜப்பானிய மக்கள் பெருந்திரளாக அவரை மரியாதை சகிதம் வழியனுப்ப தாய் மண்ணோ ஏனோ தன்னோவென்று உள்வாங்கியது.
1975 ல் கருணானந்தவின் குடும்பத்திற்கே ஜப்பான் புலமைப்பரிசில் கொடுத்து வரவேற்க காத்திருந்தது. ஆனால் பிறந்த மண்ணோ,1974 இறுதியின் பின் அவரின் குடும்பத்தை தெருவில் விட்டு ஒவ்வொருவரையும் நாலா புறமும் சிதற விட்டு தொலைத்தே விட்டது.
மீனிற்கு இரையான கருணானந்த மீட்கப்படவில்லை. மீண்டும் பேசப்படவுமில்லை. ஆனால் 2018 இலும் கூட 3 ம் தர ஜப்பானிய பாடநூலிலும் கருணானந்த உயிர்தெழுந்தார்.
அன்று 60000 ற்கும் மேற்பட்ட பார்வையாளர்களின் வாய்களை "come on ceylon, come on ceylon "என்று உச்சரிக்க வைத்த அந்த Great Loser இன் பெயர் இலங்கை வரலாற்றில் அண்மைய காலம் வரை பேசப்படவில்லை.
இப்படித்தான் பல நேரங்களில் சில விடயங்களின் அருமை,பெருமை சில மேடைகளில் பேசப்படுவதில்லை.
என் அருமை தெரியவில்லையே என விரக்திக்கு உள்ளாகிறோம்.
என் சேவைக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என தூக்கம் தொலைக்கிறோம்.
எந்த தகுதியும் இல்லாதவர்கள் கொண்டாடப் படுகிறார்கள், நாம் புறக்கணிக்கப்படுகிறோமே என அங்கலாய்க்கிறோம்.
கருணானந்த இலங்கையில் பிறந்திருந்தாலும் அவரை உதாரணமாக்கி உயர்வதற்கு ஜப்பானியரால் மட்டுமே முடியும் என்பதே உண்மை. சில பொழுது அல்ல, பெரும்பாலும் இந்த உலகம் தகுதியானவர்களை இனங்காண்பதில் தவறிழைத்து விடுகிறது. விலை உயர்ந்த வைரங்களின் பெறுமதி அறிந்தவரை தேடி ஹிஜ்ரத்களும் அவசியமாகிறது.
விளங்கும் ஆனா சுணங்கும்.ஏனெனில் நம்ம டிசைன் அப்படி.
Fauzuna Binth Izzadeen